

திருச்சி: சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான மனநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது உரையில் 'சனாதனம் ஒழிக' என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் எம்.பி. எம்.கிறிஸ்டோபர் திலக் கூறினார்.
திருச்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான எம். கிறிஸ்டோபர் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. திமுக- அதிமுகவை மையப்படுத்தியே குதிரை பேரம் நடந்துள்ளதாக சி.வி. சண்முகத்தின் கருத்தில் இருந்து தெரிகிறது. அரசியலில் குழப்பமான சூழல் நிலவும்போது எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது நடக்கத்தான் செய்யும்.
தவெக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் அமைச்சரவையில் நிச்சயம் இடம் வழங்கும். சில இழுபறிகள் இருக்கத்தான் செய்யும். அவை விரைவில் சரியாகும். காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இண்டியா கூட்டணி என்பது பாஜக எதிர்ப்பை மையப்படுத்தியதுதான். அந்த வகையில் பாஜகவை எதிர்க்கும் திமுக, இண்டியா கூட்டணியில்தான் உள்ளது.
தேர்தல் முடிந்த இந்த நேரத்தில் சில நெருடல்கள் இருக்கின்றன. வரும் காலத்தில் அவை சரியாகும். சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான மனநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது உரையில் ‘சனாதனம் ஒழிக’ என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
கேரளாவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும். மாநில அரசை ஆதரிக்கும் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறாவிட்டாலும் கூட, அக்கட்சியினரை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்து, அதில் கலந்தாலோசனை செய்து, அதன் அடிப்படையில் தமிழக அரசை வழிநடத்த தவெக முன்வர வேண்டும்,” என்றார்.