

கோப்புப் படம்
புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு வேட்பு மனுதாக்கல் நிறைவு நாளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி முடிவானது. இதில் காங்கிரஸ் 16, திமுக 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கி கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாள் கூட திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெறவில்லை.
இதனால் 5 தொகுதிகளில் கூட்டணியில் உள்ள திமுக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், வேட்பு மனு பரிசீலனை முடிந்து இறுதி பட்டியலையும் தேர்தல் துறை நேற்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை இன்றுதான் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
மண்ணாடிப்பட்டு - டி.பி.ஆர். செல்வம்(முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர்)
ஊசுடு(தனி) - கார்த்திகேயன்(முன்னாள் எம்எல்ஏ)
இந்திரா நகர் - ராஜாகுமார்
தட்டாஞ்சாவடி - வைத்திலிங்கம் (காங்கிரஸ் மாநில தலைவர்)
காமராஜ் நகர் - தேவதாஸ் (காங்கிரஸ் துணைத் தலைவர்)
லாஸ்பேட்டை - வைத்தியநாதன் எம்எல்ஏ
முத்தியால்பேட்டை - ராஜேந்திரன்
அரியாங்குப்பம் - விஜயலட்சுமி
மணவெளி - அனந்தராமன் (முன்னாள் அரசு கொறடா)
ஏம்பலம் (தனி) - கந்தசாமி (முன்னாள் அமைச்சர்)
நெட்டப்பாக்கம் (தனி) - அன்பரசன்
நெடுங்காடு (தனி) - தினேஷ்குமார்
திருநள்ளாறு - கமலக்கண்ணன் (முன்னாள் அமைச்சர்)
காரைக்கால் வடக்கு - ரஞ்சித்
மாஹே - ரமேஷ் பரம்பத் எம்எல்ஏ
ஏனாம் - கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்எல்ஏ
தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேருக்கும் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சமீபத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் டிபிஆர். செல்வம், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேச்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் காங்கிரஸில் இணைந்ததால் அவருக்கும் போட்டியிட வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு, ராஜ்பவன், திருபுவனை, மங்கலம், காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
குறிப்பாக காலாப்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானும், உழவர்கரை தொகுதியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரனும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தொகுதி பங்கீடு நடந்தாலும், கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதாவது புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 22 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் காங்கிரஸ் - திமுக இரு கட்சினரும் அதிருப்தியில் உள்ளனர்.