

சென்னை: ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் பயணிக்க, இனி, யுடிஐடி என்னும் தேசிய தனித்துவமான அடையாள அட்டை பயன்படுத்தலாம் என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ரயில்வே வாரியம் சார்பில் இயக்கப்படும், ஒவ்வொரு சாதாரண மற்றும் விரைவு ரயில்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்க, ரயில்வே வாரியம் வழங்கும் கட்டண சலுகை, பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதர மாற்றுத் திறனாளிகள், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர். இந்நிலையில், தேசிய மாற்றுத் திறனாளி நலத்துறை வாயிலாக, யுடிஐடி என்னும் தனித்துவமான அடையாள அட்டை பெற்ற அனைவரும், இப்பெட்டிகளில் பயணிக்கலாம்.
ரயில்வே வாரியத்தின் கட்டண சலுகை பாஸ் பெற்றவர்களும் இப்பெட்டிகளில் பயணிக்கலாம். அத்தகைய பாஸ் பெறாத மாற்றுத் திறனாளிகள், கட்டண டிக்கெட் பெற்று, தங்கள் யுடிஐடி அட்டையை காட்டி, இந்த சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்.
அனுமதியின்றி இப்பெட்டியில் பயணிக்கும் இதர பயணிகள் மீது, ரயில்வே சட்டத்தின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.