

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவ கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிபுக்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
அதற்கு மாற்று ஏற்பாடாக, 2026-27-ம் கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் தேர்வின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த முன்மொழிவு, தமிழகத்துக்கு பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும். இன்று கால்நடை மருத்துவ கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள்.
தமிழகம், பிளஸ்2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விபடிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது. கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது. இத்தகைய நடைமுறை கால்நடை மருத்துவ கல்வி சேர்க்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதனால், இந்த விவகாரத்தில் தாங்கள் (பிரதமர்) தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புக்கான சேர்க்கையை தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவோ அனுமதிக்க வேண்டும்.
இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாக பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய பின்னணியை கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும். நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.