மகாராஷ்டிரா விவகாரம் | சமூகநீதி வேடம் போடும் ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும்: அன்புமணி

மகாராஷ்டிரா விவகாரம் | சமூகநீதி வேடம் போடும் ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும்: அன்புமணி
Updated on
2 min read

சென்னை: வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5 % இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூக நீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான ஸ்டாலின் சமூக நீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.

சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாமகவுக்கு உண்டு.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மராட்டியத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை. அங்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது. ஆனால், இல்லாத இட ஒதுக்கீட்டுக்காக போர் முழக்கம் எழுப்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமது மைத்துனரின் ஆதரவில் செயல்பட்டு வரும் தமது சாதி சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாதங்களை வலிமையாக வைக்காமல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார்.

அத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாமக செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ஆணையிட்டது. அதன்பின் இன்றுடன் 1,423 நாள்களாகியும் இன்று வரை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தவில்லை.

இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் சமூக நீதிக்கு துரோகத்தை மட்டும் தான் ஸ்டாலின் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சமூக நீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் ஸ்டாலினும் வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா விவகாரம் | சமூகநீதி வேடம் போடும் ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும்: அன்புமணி
டெல்லி ஏஐ மாநாடு: கைகோக்க மறுத்த ‘இருவர்’ முதல் சீன ரோபோ நாய் சர்ச்சை வரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in