

மாநாட்டில் கைகோக்க மறுத்த ஆல்ட்மேன், அமோடி
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள், விழா மேடையில் ஒன்றாக கைகோத்தனர்.
அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடி ஆகியோர் தொழில் போட்டி பகைமை காரணமாக கைகோக்க மறுத்துவிட்டனர்.
விழா மேடையில் இருவரும் கைகோக்க மறுத்து, கைகளை மட்டும் உயர்த்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பறக்கும் டாக்ஸி தயாரிப்பில் என்விடியா - இபிளேன்
பறக்கும் டாக்சி தயாரிப்பில் என்விடியா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக இபிளேன் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி-யில் கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனம் இபிளேன்.
பேராசிரியர் சத்யா சக்கரவர்த்தியால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) விமானங்களை (ஏர் டாக்ஸி) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கக் கூடிய இந்த ஏர்டாக்ஸியில் 2 பேர் முதல் 4 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும். நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை தவிர்த்து குறுகிய நேரத்தில் பயணிக்க முடியும்.
சீன ரோபோ நாய் சர்ச்சையான நிலையில் மன்னிப்பு கோரிய கல்கோடியாஸ் பல்கலை.
டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் அரங்கு அமைத்திருந்தது. அதில், நேற்று முன்தினம் ‘ஓரியான்’ என்ற ரோபோ நாய், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அது தங்கள் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறிய பேராசிரியர் நேகா சிங், அதன் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார். ஆனால், அது சீனாவில் ‘யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்தது.
இந்த தகவல் வெளியானதும் கண்காட்சி அரங்கிலிருந்து கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் வெளியேற்றப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஓரியான் ரோபோ நாய் எங்கள் தயாரிப்பு அல்ல.
பேராசிரியர் நேகா சிங் கேமரா முன்னால் இருந்த ஆர்வத்தில் தவறான தகவலைக் கூறிவிட்டார். இதற்காக மன்னிப்பு கோருகிறோம்” என்று விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையில், தான் வேலை தேடுவதாக நேகா வெளியிட்ட பதிவு வைரலாகி உள்ளது.