

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று மாலை சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு புதுச்சேரி பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட தமிழக முதல்வர் திருவெண்காட்டில் உள்ள உறவினர் இல்லத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து இன்று காலை சீர்காழி தென்பாதி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து நடைப்பயிற்சியை முதல்வர் தொடங்கினார்.
அங்கு உள்ள உழவர் சந்தைக்கு சென்ற முதல்வர், காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் விற்பனை குறித்தும் அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் கச்சேரி சாலை, அரசு மருத்துவமனை சாலை, பிடாரி மேலவீதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய சாலைகளின் வழியே மக்களை சந்தித்தவாறு நடைபயிற்சி செய்தார். தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனை அருகில் கூடியிருந்த மக்கள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அருகே இருந்த தேநீர் கடைக்கு திடீரென சென்று தேநீர் அருந்தினார். தேனீர் வழங்கிய ஊழியரிடம் வியாபாரம் எவ்வாறு உள்ளது என கேட்டறிந்தார். அங்கு வந்த மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது பள்ளி மாணவிகளை பார்த்த முதல்வர் தனது நடை பயிற்சி நிறுத்தி அவர்களிடம் ஆர்வமாக கலந்துரையாடினார். மேலும், பொதுமக்களிடம் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
முதல்வரின் நடைபயிற்சியின் போது, உடன் மதிமுக வேட்பாளர் ஆர்.செந்தில் செல்வன், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் முதல்வரை பின் தொடர்ந்து நடந்து வந்தனர்.