

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள மேம்பாலப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கிழக்குகடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, 13.30 கி.மீ நீளத்துக்கு ரூ.2,100 கோடி மதிப்பில், சாலை மேம்பாலம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த மேம்பாலம், திருவான்மியூரில் ஈசிஆர் - எல்பி சாலை சந்திப்புக்கு முன்பாக தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும். இருவழிப் போக்குவரத்துக்காக 17.25 மீட்டர் அகலத்துடன், 5.5 மீட்டர் உயரத்தில், நான்கு வழித்தடமாக அமைக்கப்படுகிறது.
திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நீலாங்கரை மற்றும் அக்கரை போன்ற இடங்களில் இருந்து மேலேறும் மற்றும் கீழிறங்கும் சாய்வுப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், அக்கரை, நீலாங்கரை மற்றும் எல்பி சாலை போன்ற முக்கிய சந்திப்புகள் மேம்படுத்தப்படுவதுடன், சில பகுதிகளில் தற்போதுள்ள சாலைகள் ஆறுவழிச் சாலைகளாக அகலப்படுத்தப்பட உள்ளன.
தொழில்துறை சார்பில், நெல்லை, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் ரூ.117.65 கோடியில் 1,800 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் நியோ பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.931 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் 823 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த அடாடா டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான அடாடா செமிகண்டக்டர் நிறுவனம் தகவல் சேமிப்பக தயாரிப்புகள் மற்றும் குறைக்கடத்தி உற்பத்தி ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
அதேபோல், ஈராஸ் ஜென் ஏஐ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘லார்ஜ் கல்ச்சுரல் வாய்ஸ் மாடல்ஸ்’ திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம், குடிநீர் வசதிகள், சுற்றுச் சுவர் உள்ளிட்ட இதர கட்டிடங்கள் மற்றும் ரூ.5.65 கோடியில் ராணிப்பேட்டை மைய நூலகம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், ரூ.98.26 கோடி செலவில் கடலூரில் கட்டப்படவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.