

பழநி: கொடைக்கானலில் 3-வது நாளாக நடைப்பயிற்சியில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், ஆரோக்கியமாக இருக்க, வாக்கிங் போங்க… என்று பொதுமக்களுக்கு ‘அட்வைஸ்’ செய்தார். தொடர்ந்து ஏரியைச் சுற்றி முதல்வர் சைக்கிளில் வலம் வந்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக நட்சத்திர ஏரி, மனோ ரஞ்சிதம் அணைப் பகுதியில் முதல்வர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
3-வது நாளான இன்று (ஏப்.28) காலை நட்சத்திர ஏரி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார் முதல்வர். அப்போது, ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் ‘வாக்கிங் போங்க…’ என்று பொதுமக்களுக்கு ‘அட்வைஸ்’ செய்தார். அப்போது, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவருடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இடையில் ஒரு ஹோட்டலில் அமர்ந்து, டீ அருந்தியவாறு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், நட்சத்திர ஏரியைச் சுற்றி சைக்கிள் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் சாலையோரம் நின்று, அவருக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தவாறே சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
பின்னர், காரில் ஏறி தங்கும் விடுதிக்கு முதல்வர் திரும்பினார். இன்றை தினம் கொடைக்கானல் மேல் மலை கிராமமான மன்னவனூரில் உள்ள மத்திய அரசின் செம்மறி ஆடு ரோம உற்பத்தி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆடு மற்றும் முயல் பண்ணை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை முதல்வர் பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.