

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரஸ் கட்சி கொடிகளை சாலையில் வீசி கோஷமிட்ட திமுகவினர்.
மயிலாடுதுறை: தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் - திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானு சேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, முன்னாள் கவுன்சிலர் ரகு உள்ளிட்ட திமுகவினர், தங்கள் கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜாவை பிடித்து தள்ளியதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், காங்கிரஸ் கொடிகளை கிழித்து சாலையில் போட்டு ராகுல் காந்திக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது, ‘‘திமுகவுக்கு துரோகம் செய்த நீங்கள் எல்லாம் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதா’’ என அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ், எம்.பி. சுதா ஆகியோரை திமுக தொண்டர் கணேசமூர்த்தி என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.