

கோப்புப் படம்
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இரு மாநில அதிகாரிகள் தலைமையில் தேக்கடியில் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சித்திரை முழு நிலவு விழா மே 1-ம் தேதி நடைபெற உள்ளது.
விழா நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது. தேனி, இடுக்கி மாவட்டங்களின் ஆட்சியர்கள் ரஞ்ஜீத்சிங், தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமை வகித்தனர். இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூமத்யூ, சார் ஆட்சியர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பக்தர்கள் வசதிக்காக குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல ஜீப்களை இயக்குவது, குடிநீர், தற்காலிக பந்தல், கழிப்பிட வசதி, பாதைகளை செப்பனிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பளியன்குடி வழியாக வரும் பக்தர்களுக்கும் உரிய வசதிகளை செய்து தர முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் குமுளியில் இருந்து காலை 6 மணி முதல் பகல் 1.45 மணி வரையும், கோயிலில் இருந்து மாலை 5.30 மணிக்குள் வெளியேறவும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக்பரஸ்நாத் யாதவ், பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குநர் லட்சுமி, மாவட்ட வன அலுவலர் கிரண், வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.