முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் பாடப்பட்ட வந்தே மாதரம்

முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் பாடப்பட்ட வந்தே மாதரம்
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. அதேபோல நிகழ்ச்சியின் தொடக்கம், நிறைவு என இரு முறை வந்தே மாதரம் பாடப்பட்டது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று நடந்த பதவியேற்பு விழா, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதுடன் தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதேபோல பதவியேற்பு விழா முடியும் போதும், முதலில் வந்தே மாதரமும் அடுத்ததாக தேசிய கீதமும் பாடப்பட்டது.

வழக்கமாக தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த் தாய் வாழ்த்தும், நிறைவடையும் போது தேசிய கீதமும் பாடப்படும். ஆனால், இன்று விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அதேபோல நிகழ்ச்சியின் தொடக்கம், நிறைவு என இரு முறை வந்தே மாதரம் பாடப்பட்டது. சமீபத்தில் மத்திய அரசு, அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் பாடப்பட்ட வந்தே மாதரம்
“கஜானா காலி... அவகாசம் தேவை, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்!” - முதல்வர் விஜய் முதல் உரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in