

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர் விஜய்.
சென்னை: “இது பதவிக்காக, அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல. நம்பிய மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அமைந்த அரசு” என்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் விஜய் பேசியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அணியும் இல்லாமல் தனி அணியாக, தனி சிறப்புமிக்க அணியாக, மக்கள், மக்களை விரும்பும் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களம் கண்டோம்.
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளுக்குள் 34.92 சதவீதத்துடன் 1.72 கோடி வாக்குகளை மக்கள் தந்தனர். தவெகவை தனிப்பெரும் கட்சியாக சட்டப் பேரவைக்கு அனுப்பி வைத்தனர். மிக மிகச் சிறிய அளவில், ஒரு நூலிழையில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது.
அதனால், இந்த அரசை சிறுபான்மை அரசு போல யாரும் நினைத்தால், அதிலும் மகிழ்ச்சியே. இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசுதான்.
அதுமட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள், முதியோர், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் என அனைத்து மக்களுக்குமாக அமைந்த அரசுதான் இந்த அரசு. அந்த நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டதால்தான் இந்த நம்பிக்கை தீர்மானத்தில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், அரசு சார்பாக சில உத்தரவாதங்களை தர விரும்புகிறேன். இந்த அரசு மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிச்சயம் தரும். சமூக நீதி, சம நீதி, சம வாய்ப்புடன் உண்மையான உறுதியான ஜனநாயகத்துடன் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளுடன் இந்த அரசு நடக்கும்.
எம்மதமும் நம் மதமே. எல்லா மக்களும் நம் மக்களே. இதில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடே இருக்காது. இது எல்லோருக்குமான, சாமானியர்களுக்கான, சாதி, மத எல்லைகளைக் கடந்த, பண்பாடு காக்கும், பண்பட்ட அரசு.
அரசியல் காரணங்களுக்காக யாரையும், எதற்காகவும் புண்படுத்தாத அரசு. இதை எல்லாம் போகப்போக புரிந்து கொள்வார்கள். இது பதவிக்காக, அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல.
நம்பிய மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அமைந்த அரசு. அதிகாரம் காட்டி மிரட்டும் அரசு அல்ல. அனைவரையும் அரவணைக்கும் அரசு. எவர் மீதும் வெறுப்பு காட்டும் அரசு அல்ல. எல்லோரையும் விரும்பும் அரசு. மக்களே முக்கியம்.
மக்கள் நலன் மட்டுமே முக்கியம். அதுவே எங்கள் ஒரே நிலைப்பாடு. எனவே, மனசாட்சி உள்ள மக்களாட்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.