

பெரியாரின் 52-வது நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர்.
சென்னை: திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியாரின் 52-வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் தனது எக்ஸ் தளபதிவில், “வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த பெரியாருக்கு புகழ் வணக்கம்.
தமிழர்கள் தலைகுனியாமல் ஆதிக்கத்துக்கு அடிபணியாமல், பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்து சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி.
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்த ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழகம் நின்றால் என்றும் வெற்றி நமதே” என்று குறிப்பிட்டுள்ளார்.