

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1,844 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ரூ.212 கோடியில் 45 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின்கீழ் செயல்படும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.177.17 கோடியில் 35 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பில் ரூ.32.23 கோடியில் 9 முடிவுற்ற பணிகள், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.16.49 கோடியில் 5 புதிய திட்டப் பணிகள், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.25.79 கோடியில் 3 புதிய திட்டப் பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.11.48 கோடியில் ஒரு திட்டப் பணிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் அலுவலகப் பயன்பாட்டுக்காக ரூ.3.28 கோடி மதிப்பிலான 28 வாகனங்களையும் வழங்கினார்.
சாலைகள் திறப்பு
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.985.18 கோடியில் புறவழிச் சாலை உட்பட 36 கி.மீ.க்கு நான்குவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்ட ஓமலூர் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலை, நாமக்கல் மாவட்டத்தில் ரூ.59.15 கோடியில் மேம்படுத்தப்பட்ட அதே சாலை, ரூ.65.48 கோடியில் திருச்செங்கோட்டுக்கு அமைக்கப்பட்ட புறவழிச் சாலை, கோவையில் ரூ.250 கோடியில் மேற்கு சுற்றுவட்ட சாலை, ரூ.73.35 கோடியில் பொள்ளாச்சி மேற்கு புறவழிச் சாலை, திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் திருவத்திபுரம் புறவழிச் சாலை ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
அதேபோல, அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட வகையில் ரூ.59 கோடியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காடு - திண்டிவனம் சாலை, ரூ.50 கோடியில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, ரூ.87.69 கோடியில் திருப்பூர் மாவட்டம் பழனி - தாராபுரம் சாலை, ரூ.124 கோடியில் இரு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்ட சாலை என மொத்தம் ரூ.1,843.85 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை முதல்வர் திறந்து வைத்தார்.
முன்னாள் ராணுவத்தினர் நன்றி
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலையில் ரூ.35.45 கோடியில் முன்னாள் ராணுவத்தினர் விடுதி, பயிற்சி மையம் கட்டியதற்காக முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் ராணுவத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், நெடுஞ்சாலைத் துறை செயலர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.