

கோப்புப் படம்
சென்னை: மாநகராட்சியில் சொத்து வரி அதிக நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பைகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி, மக்களுக்கு குடிமை சேவைகளை செயல்படுத்தி வருகிறது.
மாநகராட்சிக்கு சொத்து உரிமையாளர்களால் செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரி வசூலிப்பதற்கு அறிவிப்பு வழங்குதல், நிலுவை விவரம் குறித்த அறிவிப்பை கட்டிடங்கள் மீது ஒட்டுதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்கு பெரும் தொகை சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதல் 100 சொத்து உரிமையாளர்களின் விவரம் அடங்கிய பெயர் பட்டியல் https://www.chennaicorporation.gov.in/gcc/ என்ற மாநகராட்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய மொத்த நிலுவை தொகை ரூ.31.39 கோடியாக உள்ளது. இப்பட்டியலில் குறைந்த பட்சம் ரூ.8 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.4.80 கோடி வரை நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களின் விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளது.