

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பேருந்து சாலை துறைக்கு ரூ.725 கோடியும், மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.693 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 கி.மீ தூரத்துக்கு “பள்ளிகளுக்கான பாதுகாப்பான வழித் தடங்கள்” ரூ.200 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவரது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் 2026-27-ம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ரூ.6,040.97 கோடியாக இருக்கும். 2026-27ம் நிதியாண்டில் வருவாய் இனங்களின் செலவு ரூ.6,146.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து வரி நடப்பு நிதியாண்டில் ரூ.2,300 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது வரும் நிதியாண்டில் ரூ.2,450 கோடியாக உயரும். இதுபோல, தொழில் வரி ரூ.600 கோடி இருக்கும்.
பேருந்து சாலை துறைக்கு ரூ.725 கோடி, மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.693 கோடி, திடக்கழிவு மேலாண்மை துறைக்கு ரூ.323 கோடி, புதிய பாலங்கள் கட்டுமானத்துக்கு ரூ.130 கோடி, கட்டிடங்கள் துறைக்கு ரூ.400 கோடி, மின்துறைக்கு ரூ.41 கோடி, கல்வித் துறைக்கு ரூ.11 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.4.30 கோடி, மருத்துவ சேவை துறைக்கு ரூ.1.10 கோடி, சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.85 கோடி, பூங்கா துறைக்கு ரூ.28 கோடி, மண்டலங்களுக்கு ரூ.267 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உரையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பட்ஜெட் உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.1.90 கோடி மதிப்பில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும். பள்ளி மாணவர்களை அழைத்து வரவும், கல்விச் சுற்றுலா செல்லவும் 11 புதிய பேருந்துகள் ரூ.4 கோடியில் வாங்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்தை ஈடுசெய்ய மோர் வழங்கப்படும். 60 பூங்காக்களை அறிவியல் பூர்வமாக பொலிவேற்றம் செய்வதற்கு ரூ.60 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். அம்பத்தூர் ஏரி, மஞ்சம்பாக்கம் ஏரி உள்ளிட்ட 30 நீர்நிலைகளை ரூ.100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பக்கிங்ஹாம் கால்வாய் வழித்தடத்தில் நடைபாதை, மிதிவண்டிப் பாதை, நகர்ப்புற பசுமையாக்கல் திட்டம் ரூ.45 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மெட்ரோ, எம்.ஆர்.டி.எஸ். மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 25 கி.மீ தூரத்துக்கு நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதை ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
பள்ளிகளுக்கு பாதுகாப்பான வழித் தடங்கள் 50 கி.மீ தூரத்துக்கு ரூ.200 கோடியில் அமைக்கப்படும். மின்ட்சாலை - வண்ணாரப்பேட்டை மெட்ரோ மற்றும் சேப்பாக்கம் - மெரினா இடையே பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை கயிறு வழித்தடம் அமைக்கப்படும். நீர்நிலைகளை கண்காணிக்க ஏஐ உதவியுடன் ட்ரோன் ஆய்வு அமைப்பு ரூ.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பது உள்பட 90 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.