

சென்னை: வருமான வரித்துறை ஓய்வு பெற்ற முதன்மை ஆணையர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
வருமான வரித்துறை ஓய்வு பெற்ற முதன்மை ஆணையர் ரெங்கராஜ். ஐஆர்எஸ் அதிகாரியான இவர் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சிபிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தியது. ஆரம்பக்கட்ட விசாரணையில், பணியில் இருந்த காலகட்டத்தில் ரெங்கராஜ் மற்றும் அவரது மனைவி தங்களது அறியப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்களது வருமானம், செலவினங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சுமார் 34.53 சதவீதம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருப்பதாக சிபிஐ கண்டறிந்துள்ளது..
இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெங்கராஜ், உமா மகேஸ்வரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள், நிலம், வீடுகள் மற்றும் பிற முதலீடுகள் குறித்த விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.