

செந்தில் பாலாஜி
சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் 3 முறை டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த துயர சம்பவத்துக்கு திமுக மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களே காரணம் என தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவம் நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்நிலையில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
அதன்படி செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீதே குற்றச்சாட்டை முன்வைத்து செந்தில் பாலாஜி பதில்களை அளித்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி அளித்த விளக்கங்கள் அனைத்தையும் சிபிஐ அதிகாரிகள் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில் விசாரணை நிறைவடைந்தது.