

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் சென்னை சிட்லப்பாக்கம் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. படம்:எம்.முத்துகணேஷ்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காகச் செலவு செய்ய முடியும்.
தேர்தல் நடைமுறைகளை தீவிரமாகக் கண்காணிக்க 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மட்டுமல்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்புக் குழுக்களும் இடம்பெற்றுள்ளன. இதில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இக்கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன.
பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று காலை வரை 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இனங்களில் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதற்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டியதில்லை என்றும், தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு பொது இடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ வைக்கப்பட்டு இருந்தால் அவை மறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ரொக்கம் எடுத்து செல்லும் பொழுது அவை எப்படி பெறப்பட்டது, எதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், அத்தொகை பறிமுதல் செய்யப்படாது. உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்கப்படும். இது குறித்து முறையீடு ஏதும் இருப்பின் மாவட்ட குறைதீர் குழுவிடம் முறையிடலாம். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
மேலும், புகார்கள் தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியரை மாற்றுவது தொடர்பான புகார் தேர்தல் தொடர்பானது இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்லடத்தில் மருத்துவச் செலவுக்காக கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
327 பார்வையாளர்கள் நியமனம்: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்கள், 188 காவல் துறை பார்வையாளர்கள், 366 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் துறை பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்கள், 4 காவல் துறை பார்வையாளர்கள், 17 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 18-க்குள் (இன்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்களில் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.