

ஒகேனக்கல் காவிரியாற்றில் செந்நிறத்தில் சீறிப்பாயும் புதுவெள்ளம்.
தருமபுரி: கர்நாடக மாநிலத்திலுள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மாநில எல்லையான ஒகேனக்கல்லை அடுத்த பிலிகுண்டுலுவில் நேற்று காலை வந்தடைந்தது.
நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் கர்நாடகா மாநில அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் உபரிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை அடுத்துள்ள தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது.
இதன்படி நேற்று முன்தினம் விநாடிக்கு 500 கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று அதிகாலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 1,000 கனஅடியாக உயர்ந்தது. தொடர்ந்து 7 மணியளவில் விநாடிக்கு 8,000 கனஅடியாகவும், காலை 10 மணியளவில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்தது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை அறிவித்துள்ளது. இதனால், நேற்று ஒகேனக்கல் சுற்றுலா வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல, நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியைக் கடக்கும்போது ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் தடை அறிவிக்கப்படும்.
நேற்று முன்தினம் வரை சிறிதளவு தண்ணீருடன் காணப்பட்ட பிரதான அருவி பகுதியிலும், வறண்டு காணப்பட்ட ஐவர் பாணி என அழைக்கப்படும் ஐந்தருவி பகுதியிலும் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்கிறது. புதிதாக வந்து சேர்ந்துள்ள தண்ணீர் என்பதால் ஒகேனக்கல்லில் கலங்கலாக செந்நிறத்தில் தண்ணீர் சீறிப்பாய்கிறது.