“சட்டப்பேரவைக்குள் இட்டை இலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள் நுழைவர்” - வானதி சீனிவாசன் நம்பிக்கை

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுச்சேரி: “தமிழகத்தில் மக்கள் எங்களுக்கு வாக்களிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இட்டை இலக்கத்தில் எங்கள் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள்” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியை பொறுத்தவரை கடந்த 5 வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய மாநிலமாக இருந்து வருகிறது.

புதுச்சேரி மாதிரியான சிறிய மாநிலங்கள் தங்களுடைய பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் உதவி எப்போதும் அவசியம். புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி தொடர இன்னும் ஆயிரக்கணக்கான கோடியை கொட்டி கொடுப்பதற்கு பிரதமர் மோடி தயாராக இருக்கிறார். இந்த வளர்ச்சி பயணம் தடைபடாமல் இருக்க இந்த அரசு தொடர வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, இண்டியா கூட்டணி பெயர் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் கூட்டணி கிடையாது. எந்தளவுக்கு காங்கிரஸ்-திமுக-கம்யூனிஸ்ட்டுகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு புதுச்சேரி சிறந்த உதாரணம். கோவை வாளையாறில் இருகட்சிகளும் ஒன்றாக சேர்ந்து வாக்கு கேட்கின்றனர். வாளையாறு செக்போஸ்டை தாண்டினால் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் திட்டிக்கொண்டு இருக்கின்றனர். புதுச்சேரியில் அதைவிட ஒருபடி மேலேயே சென்றுவிட்டனர்.

ஒரே தொகுதியில் இருகட்சிகளின் வேட்பாளர்கள். யாரும் யார் சொல்வதையும் கேட்பதில்லை. எந்தவித ஒருங்கிணைப்பும், ஒற்றுமையும் இல்லாத இண்டியா கூட்டணிக்கு வாக்களிப்பது என்பது புதுச்சேரி மக்கள் தங்களுடைய தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்பாடுவதற்கு சமம். இண்டியா கூட்டணியின் அத்தனை வேட்பாளர்களையும் புறந்தள்ள வேண்டும்.

சிறிய மாநிலத்தில் கூட இவர்களால் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை என்றால், இவர்களால் எப்படி இந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல முடியும். தேர்தலில் ஏது நட்புரீதியான போட்டி. திமுக-காங்கிரஸ் பிரிந்திருப்பது எங்களுக்கு சாதகமல்ல. தேர்தலே எங்களுக்குத்தான் சாதகம், என்றார்.

அப்போது, இந்த தேர்தலில் மகளிர் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது குறித்து கேட்டபோது, அதற்கு வானதி சீனிவாசன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதே பாஜக அரசுதான். ஆனால் அதற்கான காலம் கனிகின்றபோது நிச்சயம் அதிகமான எண்ணிக்கையில் மகளிர் இடஒதுக்கீட்டில் வந்துவிடுவார்கள். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது, எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சி தலைமை தகுந்த நேரத்தில் அறிவிக்கும், என தெரிவித்தார்.

சிலிண்டர் தட்டுப்பாடு எங்கும் இல்லை. கள்ளசந்தையில் போய்விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள் உண்டு. இந்த பிரச்சினையை சமாளிக்க ஈரான், நம்முடைய இந்திய கப்பல்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கக்கூடிய சூழல் பிரதமர் மோடியால் வந்திருக்கிறது.

மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதோ, தெருக்களில் நின்று போராடுவது, பெட்ரோல், டீசல் விலை பலமடங்கு உயர்வது பக்கத்து நாடுகளில் நடந்து வருகிறது. அதுபோன்ற நிலை இந்தியாவில் இல்லை. இதையெல்லாம் பிரதமர் பக்குவமாக கையாண்டு வருகின்றார். இந்த நேரத்தில் எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக நாட்டின் நெருக்கடி என்று பார்க்க வேண்டுமே தவிர, அரசாங்கத்துக்கு எப்படி தொல்லை கொடுக்க வேண்டும் என்று யோசித்தால் நாட்டின் மக்களுக்குத்தான் கஷ்டம்.

வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டி தொடர்பாக கட்சி தலைமை சொல்லும். அதிமுக தோல்வியடையும் தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்குவதாக சமூக வலைதளங்களில் பரவுவது குறித்த கேள்விக்கு, வேண்டும் என்றே திமுக எங்கள் தொண்டர்களின் மன உறுதியை குளைப்பதற்காக இதுபோன்ற பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இது அவர்களுக்கு புதிதல்ல.

மக்கள் எங்களுக்கு வாக்களிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இட்டை இலக்கத்தில் எங்கள் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்த அறிவிப்புக்கு, அவருக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தனர், அதை முடித்துவிட்டார். அவருக்கு பின்னால் நின்றவர்கள் தெருவில் நிற்கின்றனர். கமல்ஹாசன் செய்தது தியாகம் அல்ல துரோகம். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
அதிருப்தியில் குமுறும் கூட்டணிக் கட்சிகள்: தேர்தலில் திமுகவுக்கு சிக்கலை உருவாக்குமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in