

சென்னை: அப்பா, தங்கை, மகன் வரிசையில் மருமகனை எம்.பி.யாக்கி குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்த திமுக முயற்சிப்பதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ். பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. சாதாரண மக்கள் வீடு கட்டினால்கூட கவுன்சிலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. சாதிச் சான்றிதழ் பெறக்கூட லஞ்சம் கேட்கப்படுகிறது.
திமுக தலைவரின் மருமகன் சபரீசன் தற்போது வெளிப்படையாகவே அரசியல் களத்துக்கு வந்துள்ளார். அப்பா முதல்வர், தங்கை எம்.பி., மகன் துணை முதல்வர் என்ற வரிசையில் இப்போது மருமகனையும் எம்.பி.யாக்கி, ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே திமுக முயற்சிக்கிறது.
குடும்ப அரசியல், ஊழல், சர்வாதிகார ஆட்சியில் இருந்து தமிழகத்தை அனைவரும் மீட்டெடுக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவினாலும், களத்தில் உண்மையான போட்டி அதிமுக - பாஜக கூட்டணிக்கும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேதான் என்பது உறுதியாகியுள்ளது.
தவெக அல்லது நாதகவுக்கு அளிக்கப்படும் வாக்குகள், திமுகவை வீழ்த்துவதற்கு உதவாது. மாறாக, அவை செல்லாத ஓட்டுகளாகவே அமைந்து, மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
எனவே, திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.