

அமைச்சர் மரியவில்சன்
புதுச்சேரி: சொத்து பிரச்சினையில் சகோதரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் 10-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரியவில்சன் நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரும், இவரது தந்தை நெஸ்டோர் ஆகிய இருவரும் சொத்து பிரச்சினை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் வீட்டை உடைத்து உள்ளே சென்று அவரையும், அவரது மனைவியையும் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்டோர் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், மரியவில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
கடந்த மாத வாய்தாவின் போதும் மரிய வில்சன் ஆஜராகவில்லை. இந்த நிலையில் குற்றப்பத்திரிகையையும் குற்றம்சாட்டப்பட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக புகார்தாரரால் சமர்ப்பிக்கப்பட்ட பென் டிரைவ்-வைப் பெற நீதிமன்றத்தில் கட்டாயம் நேற்று (சனிக்கிழமை) ஆஜராக வேண்டும் என நீதித்துறை நடுவர் சேரலாதன் ஏற்கெனவே உத்தரவிட்டார்.
ஆனால் மரியவில்சன் நேற்று ஆஜராகவில்லை. அவரின் வழக்கறிஞர், தமிழகத்தில் பட்ஜெட் பணிகள் நடந்து வருவதால், மரியவில்சனால் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார். அதற்கு நீதிபதி, “சனிக்கிழமை, விடுமுறை நாள் என்பதால்தான் ஆஜராகும்படி கூறினேன். இப்போதும் ஆஜராகவிட்டால் என்ன செய்வது” என கேள்வி எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து வரும் 6-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என கூறினார். அதற்கு காலநீட்டிப்பு கோரப்பட்டதையடுத்து வரும் 10-ம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை பெற மரியவில்சன் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.