

புதுடெல்லி: டெலிகிராம் செயலியில் திரைப்படங்கள், ஓடிடி உள்ளடக்கங்கள் மற்றும் பிற ஆடியோ-வீடியோ வடிவங்கள் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெலிகிராம் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை, குறிப்பிட்ட சில சேனல்களை மட்டும் முடக்கி வந்த தற்காலிக நடைமுறையிலிருந்து மாறி, ஒட்டுமொத்த தளத்தின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பதிப்புரிமை மீறல்என்பது வெறும் சிவில் விவகாரம் மட்டுமல்ல, அது 1957-ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952-ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராஃப் சட்டத்தின்படி கடுமையான குற்றவியல் குற்றமாகும் என்று டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, அரசாங்கம் சுட்டிக்காட்டும் சேனல்களை மட்டும் முடக்கும் செயலற்ற அணுகுமுறையை விடுத்து, ஐடி சட்டம் 2000 மற்றும் ஐடி விதிகள் 2021-ன் படி, தங்களின் தளத்தில் திருட்டு உள்ளடக்கங்கள் பரவாமல் இருப்பதைத் டெலிகிராம் நிறுவனமே முன்னெச்சரிக்கையாக உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சத்துக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே டெலிகிராம் மீதான இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கன்டென்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுக்கான டெலிகிராம் நிறுவனத்தின் குறைதீர்க்கும் கட்டமைப்பு குறித்தும் மத்திய அரசு விவரங்களைக் கோரியுள்ளது.
இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம், திரைத்துறை மற்றும் ஓடிடி நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், போதிய ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் டெலிகிராம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.