8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு

திருநர்களுக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிட வசதிகள்
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: பெண்களின் திருமண நன்னாளில் தமிழக அரசின் சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கப்படும் என்றும், இத்திட்டத்துக்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணன் சீர்:

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அண்ணனாகவும், தம்பியாகவும் இருந்து, அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பவர்தான் நமது முதலவர் விஜய். திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.

இந்தத் தருணத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாட்டின் பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதும் நமது முதல்வர், அப்பெண்களின் திருமண நன்னாளில் நமது அரசின் சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கவிருக்கிறார். இத்திட்டத்தினைச் செயல்படுத்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காமராசர் காலை உணவுத் திட்டம்:

நம்முடைய கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தினை கொண்டு வந்து, மாணவர்களின் வயிற்றுப் பசியை மட்டுமின்றி கல்விப் பசியையும் போக்கினார்.

நண்பா மற்றும் நண்பிகள் மேல் பேரன்பு கொண்ட நம் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் சூட்டி, பெருந்தலைவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தினை முதல்வர் விஜய் விரிவுபடுத்தி உள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் நாள் முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம், கூடுதலாக 15,434 பள்ளிகளில் பயிலும் 1514 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கு திருத்த வரவு செலவு மதிப்பீடுகளில் 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான இல்லம்:

மூத்த குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான முதுமை மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்து, முதியோருக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

மூத்த குடிமக்களுக்கான அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் இல்லங்கள், தகுதிவாய்ந்த பராமரிப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும்.

முதலாம் ஆண்டில், 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் இடம்பெறுவர். இத்திட்டத்திற்காக 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும் நூலகங்கள், யோகா, தியான வகுப்புகள் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் நிறுவப்படும். மூத்த குடிமக்களின் மக்கள்தொகை அடிப்படையில் இம்மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

500 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள்:

எதிர்காலத் தலைமுறையான நம் வீட்டுக் குழந்தைகளின் வாழ்வு கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பும் உள்ளம் கொண்டவர் நம் முதல்வர் விஜய். விஜய் மாமா விஜய் மாமா என பாசம் பொங்க அழைக்கும் குழந்தைச் செல்வங்களைப் பற்றி நாள்தோறும் சிந்திப்பவர் அவர்.

அக்குழந்தைகள் தினமும் வரும் அங்கன்வாடி மையங்களில் அவர்களுக்கான ஆரம்பகால பராமரிப்பு மற்றும் சேவையை நல்ல முறையில் வழங்கிடும் பொருட்டும், மையத்திற்கு வரும் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதி செய்திடும் பொருட்டும் பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய, 500 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் நடப்பாண்டில் கட்டப்படும்.

திருநர்களுக்காக அரண் தங்குமிடம்:

திருநர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பை உறுதிசெய்யும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சி வழங்கப்படும்.

மேலும், அவர்கள் தொழில் தொடங்குவதற்கும். நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் மானியத்துடன் இணைந்த வங்கிக் கடன் வசதியும் வழங்கப்படும். நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை சுயதொழில் மானியத்துடன் வங்கிக் கடன் பெற ஊக்குவிக்கப்படுவார்கள்.

சமூக மற்றும் குடும்பச் சவால்களை எதிர்கொள்ளும் திருநர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம், உணவு, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு ஆதரவை வழங்குவதற்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிட வசதிகள் நிறுவப்படும்.

மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை, தேர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளுக்காக பிற நகரங்களுக்குப் பயணம் செய்யும் திருநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 15 மாவட்டங்களில் குறுகியகால தங்குமிட வசதிகள் நிறுவப்படும்.

இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 9.818 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
ஹஜ் பயண அரசு மானியம் ரூ.35,000 ஆக உயர்வு: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
தமிழக பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள் | அணிவகுத்த ‘வெற்றி’ திட்டங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in