

டெல்லியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறி ஆனந்தமாக, அன்போடு தமிழகத்தில் ஓர் அரசியல் இயக்கத்தை அனைவருடனும் இணைந்து தொடங்குகிறேன். இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கக்கூடிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக நேற்று மதியம் காணொலி வாயிலாக சமூக ஊடகங்களில் அவர் பேசியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு ஆக.25-ம் தேதி பாஜகவில் இணைந்தேன். பாஜகவில் தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நான் எந்த இடத்தில் பாஜகவில் இணைந்தேனோ, அதே இடத்தில் மரியாதையோடு, பண்போடு, அன்போடு பாஜகவில் இருந்து இன்று வெளியேறுகிறேன்.
நான் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பு, நடிகர் ரஜினிகாந்த் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரது இயக்கத்தில் இணைய மறுத்துவிட்டு, நான் பாஜகவில் சேர்ந்தேன். ‘தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழகத்தின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும்’ என்று விரும்பினேன். அதனால்தான் தேசியத் தலைவர்களிடம் பேசி, உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றோம். தனிப்பட்ட முறையில் எனக்கும், இன்னொரு கட்சிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
பாஜக தமிழர் அடையாளத்தோடு களத்தில் இருந்தால் மட்டும்தான், அது தமிழர் நலனை முன்னிறுத்தும் கட்சியாக, இந்திய அடையாளத்தோடு இருக்க முடியும். அந்த வகையில், கடந்த 18 மாதங்களாக எனக்கு இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை பாஜக தலைவர்களிடம் மிக பொறுமையாக எடுத்துச் சொல்லி வந்தேன்.
அதேநேரம், கடந்த 2025 டிச.4-ம் தேதி ‘‘பாஜகவில் இருந்து நான் வெளியே செல்ல இருக்கிறேன்’’ என்று தெரிவித்து, தேர்தல் முடியும் வரை காத்திருந்தேன். தற்போது, பாஜகவில் இருந்து வெளியேறி, ஆனந்தமாக, அன்போடு தமிழகத்தில் ஓர் அரசியல் இயக்கத்தை அனைவருடனும் இணைந்து தொடங்குகிறேன். இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கக்கூடிய பொதுத் தேர்தலில் போட்டியிடும். அதற்கு நாம் தயாராக வேண்டும். நிறைய தலைவர்கள், தொண்டர்கள், தன்னார்வலர்களை அதற்கு தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு அதற்கேற்ற திறனை உருவாக்கித் தரவேண்டும். அதற்கு சற்று அவகாசம் தேவைப்படும்.
தமிழகத்துக்கு இப்போது ஒரு புதிய அரசியல் கட்சி தேவைதான். நாம் அனைவரும் முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். சாமானிய மனிதருக்கான ‘காமன் மேன்’ அரசியலை முன்னிறுத்த வேண்டும். நம் இயக்கத்தைப் பொருத்தவரை, எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்பு தரப்படும். அதனால், ஒருவர் எத்தனை முறை எம்.பி., எம்எல்ஏ ஆக இருக்கலாம் என்ற காலவரம்பு கொண்டு வரப்படும். நான் உட்பட இயக்கத்தில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும். நிரந்தர எம்எல்ஏ, நிரந்தர எம்.பி., நிரந்தரத் தலைவர் என்பதை எல்லாம் நாம் உடைப்போம். நாம் ஆரம்பிக்கும் இயக்கம், கட்சியாக மாறும் நாளில் இதை சொல்வோம். ஏற்கெனவே கடந்த 2020-ம் ஆண்டு http://www.wetheleader.org என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் இயக்கத்தில் நீங்களும் உங்களை இணைத்து கொள்ள வேண்டும்.
அனைவரையும் அரசியலுக்கு கொண்டு வருவதற்காக, அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக கோவையில் ‘ஏபிஜே. அப்துல்கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் இன் பாலிடிக்ஸ்’ என்ற பெயரில் பயிற்சி வழங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு நிறைய வேட்பாளர்களை இங்கிருந்து நாம் அனுப்புவோம். நல்ல அரசியலை சொல்லிக்கொண்டே வருவோம். நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள்.
தொழிலதிபர்களோ, நட்சத்திர அந்தஸ்து உடையவர்களோ இல்லை. அதேபோல, பாரம்பரியமான அரசியல் கட்சியை ஆரம்பித்து யாரும் அதை நம்மிடம் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. நாம் அனைவரும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு படியாகத்தான் இந்த இயக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, என்னோடு பயணிக்க நினைக்கும் அனைவருக்கும் கொஞ்சம் பொறுமை, நிதானம் வேண்டும்.
புயலுக்கு சாயக்கூடிய கட்டிடத்தை நாம் கட்டப்போவது கிடையாது. எனவே, மாற்றுக் கட்சியில் இருந்தாலும், யார் வேண்டுமானாலும் என்னுடன் வந்து இணையலாம். முதலில் நாம் மாறுவோம், பிறகு மாற்றம் தன்னால் நடக்கும். ‘மாறுவோம், மாற்றுவோம்’ என்பதுதான் நம் இயக்கத்தின் கொள்கை.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் ‘வாரியர்ஸ்’ அல்ல. என்னைப் பொருத்தவரை மாற்றத்தைக் கொடுக்க கூடியவர்கள்தான் ‘வாரியர்ஸ்’. களத்தில் சண்டை போடுவது நமது வேலை இல்லை. மாற்றத்தைக் கொடுப்பதுதான் நம் வேலை. அதனால்தான் சமூக ஊடகங்களில் வந்து பேசுகிறேன்.
ஜென்-ஸி இளைஞர்கள்: புதிதான ஒரு தலைமுறையை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும். அவர்களை ஒதுக்கி வைக்க முடியாது. ஜென்-ஸி, ஜென் ஆல்ஃபா இளைஞர்களின் வேகத்துக்கு நாம் தீனி போட வேண்டும். திமுக, அதிமுக, தவெக, நாதக, மதிமுக, தேமுதிக, பாமகவை எப்படி பார்க்கிறேனோ, அதேபோலத்தான் பாஜகவையும் பார்ப்பேன். பாஜக மீது வன்மம் எதுவும் கிடையாது. தரம் பார்த்து மக்கள் நம்மை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாகக் கொண்டுவருவதே நமது குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.