குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: கும்மிடிபூண்டி பாலியல் வன்கொடுமைக்கு அன்புமணி கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

Updated on
2 min read

சென்னை: போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு அருகில் வசிக்கும் வட மாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தையை 4 மனித மிருகங்கள், நேற்று மாலை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தது. குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. பால் மனம் மாறாத குழந்தையை சீரழித்த நான்கு மனித மிருகங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் என்று தெரியவந்துள்ளது. நால்வரும் கஞ்சா போதையில் தான் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். பால் மனம் மாறாத மூன்றரை வயது குழந்தையை 4 மனித மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

இதே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் தான் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நான்காம் வகுப்பு பயிலும் சிறுமியை, ஆந்திராவில் இருந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனித மிருகம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தான். இதைக் கண்டித்து பாமக தொடர் போராட்டம் நடத்திய பிறகு தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான். அந்த வழக்கின் விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஆரம்பாக்கத்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. அதை மனதில் கொண்டாவது அந்தப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழித்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தோல்வி அடைந்ததன் விளைவு தான் மூன்றரை வயது குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஆகும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>பாமக தலைவர் அன்புமணி</em></p></div>
100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கான இ100 எரிபொருள் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in