

திருவள்ளூர்: அமோனியா வாயுக் கசிவு விபத்து ஏற்பட்ட கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு அகற்றும் பணி 4-வது நாளாக இன்று தொடர உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 83 பேரில், கடந்த 2-ம் தேதி இரவு வரை 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட இரு தனியார் மருத்துவமனைகள், சென்னையில் உள்ள இரு அரசு மருத்துவமனைகள் என, 4 மருத்துவமனைகளில் 51 பேர் சிகிச்சை பெற்று, தங்குமிடத்துக்கு திரும்பினர். மற்ற 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் சேமிப்பு தொட்டிகளில் இருப்பு வைத்திருந்த 2 டன் அமோனியா வாயுவை அகற்றும் பணி, கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலம் நடைபெற்ற இப்பணியில், கடந்த 4, 5 நாட்களில் 2 டன் அமோனியா வாயு தொட்டிகளில் இருந்து அகற்றப்பட்டு, டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டது. இந்த லாரி நேற்று அதிகாலை சென்னை, மணலியில் உள்ள மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
இப்பணிக்காக கன்னிகைப்பேர் பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், தனியார் நிறுவனம் அமைந்துள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் (716), சாலையின் இரு திசையிலும், தலா 300 மீட்டர் தூரத்துக்கு நேற்று ஒரு வழி பாதையில் வாகன போக்குவரத்து இருந்தது; கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்பட தொடங்கின.
அமோனியா வாயுவை அகற்றும் பணி 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில், குளிரூட்டும் அறை, பதப்படுத்தும் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் குழாய்களில் தேங்கியுள்ள வாயுவை, சல்பியூரிக் ஆசிட் மூலம் தூய்மைப்படுத்தி முழுமையாக அகற்றும் பணி நடைபெற்றது.
காலை 9 - மாலை 5 மணிவரை நடைபெற்ற அப்பணி, முடிவுக்கு வரவில்லை. ஆகவே, அமோனியா வாயு அகற்றும் பணி 4-வது நாளாக இன்றும் தொடர உள்ளது.
பாதுகாப்பாக அமோனியா வாயு அகற்றும் பணிக்காக 4-வது நாளாக இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவற்றை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.