

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலைக்கு மாலை 5.20 மணிக்கு வந்தார்.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் வளாகத்தில் உள்ள தளத்தில் ஹெலிகாப்டர் தரையிரங்கியது. அங்கு, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆர். உதயகுமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சருக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பலத்த பாதுகாப்புடன் காரில் அண்ணாமலையார் கோயிலுக்கு மாலை 5.30 மணிக்கு வந்தார்.
அப்போது வரும் வழியில் வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு பின்னர் இருந்து பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். அவருக்கு, கோயில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மரியாதை அளித்துவரவேற்றனர். பின்னர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மாலை 6.20 மணிக்கு புறப்பட்ட அவர் கிரிவல பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு மாலை 6.30 மணிக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து மாலை 6.55 மணிக்கு புறப்பட்டு, சாலை மார்க்கமாக திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
அண்ணாமலையார் கோயிலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் வருகை தந்ததையொட்டி, கோயிலில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வடக்கு மண்டல ஐஜி பிரவின்குமார் அபினவ், வேலூர் சரக டிஐஜி மகேஷ், 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.