

மேலே > ராஜா, ராமச்சந்திரன், நிகிதா, அஜித்குமார் | கீழே > கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கர மணிகண்டன்
மதுரை: போலீஸ் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட நீதிபதி, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்கட்டும் என்று உத்தரவிட்டார்.
மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்பவர் தனது காரை பார்க்கிங் செய்ய அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அவரும் நிகிதாவின் காரை பார்க்கிங் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்ட போது நிகிதாவுக்கும் அஜித்குமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்து அஜித்குமார் மீது காவல் துறையில் நிகிதா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிப்படை காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அஜித்குமார், ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார்.
மடப்புரம் கோயில் மாட்டுக் கொட்டகையில் வைத்து அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருப்புவனம் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சர்ச்சைப் பெரிதானதால், அஜித்குமார் காவல் மரணம்மற்றும் அவர் மீதான நகை திருட்டு வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.
அதன்பின் திருப்புவனம் காவல் நிலையம் முதல் மடப்புரம் கோயில் வரை உள்ள பாதைகளில் உள்ள சிசிடிவிகேமரா காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர் அத்துடன், உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் உட்பட பலரிடம் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
ஜாமீன் கோரி மனு: இதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி அஜித்குமார் மரண வழக்கில் தனிப்படை காவல் வேன் ஓட்டுநரும் காவலருமான ராமச்சந்திரன், மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோரையும் குற்றவாளிகளாக சேர்த்தது.இந்த வழக்கில் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சிபிஐ தரப்பில், ‘‘அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகி உள்ளது. இதில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்கும் தொடர்புள்ளது’’ என்று கூறப்பட்டது.
அப்போது நீதிபதி ஸ்ரீமதி, அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிபிஐ தரப்பில், நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை. இதனால் அந்தப் புகார் முடித்து வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமா? - அதைக் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, ‘‘நகை திருட்டு நடைபெறாமலேயே, நகைதிருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டு, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர்தானே எல்லாவற்றுக்கும் காரணம்? ஒரு நபர் மீது இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? அவர்களுக்குள் முன்விரோதம் ஏதும் இருந்ததா?’’ என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிபிஐ தரப்பில் அளித்த பதிலில், ‘‘அப்படி முன்விரோதம் எதுவும் இல்லை. அஜித்குமாரை விசாரிக்குமாறு டிஎஸ்பி கூறியுள்ளார். அதனால் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது’’ எனக் கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள் தனிப்படை காவலர்களில் பிரபு என்பவரை தவிர மற்றவர்கள்தான் அஜித்குமாரை தாக்கியதாக கூறியுள்ளனர். எனவே, பிரபுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதி ஸ்ரீமதி, ‘‘யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை சிறையில் இருக்கட்டும். நடந்ததைக் கேட்டு மனம் பதறுகிறது. ஏதுமில்லாத ஒன்றுக்காக ஒருவரை இப்படி தாக்கியுள்ளனர். இதில் தொடர்புடைய காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம். விசாரணை பிப்.17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.