

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி
தனித்தே நின்று 108 இடங்களை வென்றும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் விஜய். எனினும் அறுதிப் பெரும்பான்மைக்கு மிக அருகில் நிற்பதால் எப்படியும் விஜய் தமிழக முதல்வராவார் என தவெக-வினர் நம்புகிறார்கள். இதற்கு நடுவே, அதிமுக ஆட்சியமைக்க திமுக நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்திருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்றும் தகவல்கள் தடதடக்கின்றன.
திமுக-வை எதிர்த்தும் விமர்சித்தும் மட்டுமே ஆட்சியைப் பிடித்த இயக்கம் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக நிற்பதுதான் இரண்டு கட்சிகளுக்குமே நல்லது. அப்படி இருப்பதால் மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இதனால் இவர்களிடம் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் அதற்குப் பிறகு எழவே முடியவில்லை.
இந்த நிலையில்தான், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் தலைதூக்கியது. ஆனால், அந்தக் கட்சியாலும் இப்போது வரைக்கும் திராவிடக் கட்சிகள் தயவில்லாமல் முன்னுக்கு வரமுடியவில்லை. என்றபோதும், விஜய்யின் வரவால் இம்முறை திராவிடக் கட்சிகளின் தலைமை இல்லாத ஓர் அரசாங்கம் தமிழகத்தில் அமையும் சூழல் உருவாகி இருக்கிறது. காங்கிரஸ், பாஜ கட்சிகளால் சாதிக்க முடியாத இந்த அதிசயத்தை சாதித்துக் காட்டி இருக்கிறார் விஜய்.
இருந்த போதும் அறுதிப் பெரும்பான்மைக்காக, இப்போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் தயவை நாடி நிற்கிறார் விஜய். இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதேபோல் பழைய பாசத்தில் விசிக தலைவர் திருமாவளவனிடம் நேற்று முன்தினம் மாலை ஆதவ் அர்ஜுனா நேரடியாகவே பேசி இருக்கிறார். முதலில் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக சொன்ன திருமாவளவன், இரவு 8 மணிக்குமேல் ஆதவ் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டபோது வேறுவிதமாக பதில் சொல்லி இருக்கிறார். கம்யூனிஸ்ட்களும் தவெக தரப்புக்கு பிடிகொடுக்கவில்லை. என்றாலும் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கருத்தை இந்த மூன்று கட்சிகளுமே வலியுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில், இந்தக் கட்சிகளை திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
விசிக, கம்யூனிஸ்ட்களின் ஆதரவுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பாமக தரப்புடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை தவெக. இருப்பினும் இரண்டு தரப்பிலும் சிலர் நட்பு ரீதியில் பேசியபோது, தங்களுக்கு துணை முதல்வர் பதவியை தருவதுடன் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் பாமக தரப்பில் கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறார்கள். இதற்கு சாத்தியமில்லை என்பதால் மேற்கொண்டு இதுபற்றி தவெக தரப்பில் பேச்சுவார்த்தையை தொடரவில்லை என்கிறார்கள்.
இப்படியான சூழலில்தான், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க ஆலோசனை நடப்பதாக நேற்று முன்தினம் ஒரு செய்தி காட்டுத் தீயாய் கசிந்தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் கான்வாய் விலக்கப்பட்டதும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக உள்வட்ட நிர்வாகிகள் சிலர், “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்றதைவிட தனது தந்தை ஸ்டாலின் தோற்றதை உதயநிதி ஸ்டாலினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இதை சரிசெய்ய வேண்டும் என்
பதில் தீவிரமாய் இருக்கிறார் உதயநிதி. அதிமுக உடன் திமுக கைகோர்க்கிறது என்ற செய்தியும் உதயநிதி தரப்பில் இருந்தே கசிந்திருக்கிறது. இது தொடர்பாக பழனிசாமியின் மகன் மிதுனுடன் நேற்று முன்தினம் உதயநிதி பேசியதாகவும் சொல்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக காலூன்றி இருக்கும் விஜய், ஆட்சியில் அமர்ந்தால் திராவிடக் கட்சிகளில் ஒன்று நிச்சயம் காணாமல் போய்விடும். ஏற்கெனவே கரைந்து கொண்டிருக்கும் அதிமுக அந்த இடத்துக்கு தள்ளப்பட நிறையவே வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்தே, அதிமுக தரப்பிலும் ‘திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி’ என்ற செய்திகளை யாரும் மறுக்கவில்லை. மாறாக, “118 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திப்பார் பழனிசாமி” என திடமாகச் சொல்லி இருக்கிறார் புதுச்சேரி மாநில அதிமுக அமைப்பாளர் அன்பழகன்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதில் சொன்ன அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலைகூட, “திமுக ஆதரவு குறித்து பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்றுதான் சொல்லி இருக்கிறார்.
திமுக - அதிமுக ஆட்சி குறித்த செய்திகளை டெல்லி பாஜக தலைமையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவுக் ‘கரம்’ நீட்டி இருப்பது. விஜய் செல்வாக்கில் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது பாஜக. அதன் காரணமாகவே, அறுதிப் பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் பட்டியலைக் கேட்டு விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இழுத்திருக்கிறார் ஆளுநர்.
விஜய் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக பழனிசாமியை வெளியில் இருந்து ஆதரிக்கும் முடிவுக்கு திமுக வந்திருப்பதாக சொல்பவர்கள், “இது தொடர்பாக டெல்லியின் அனுமதியோடு அதிமுக சில மூவ்களை எடுத்து வருகிறது. அதன்படி நேற்றே பழனிசாமி ஆளுநரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், விஜய்க்கு சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருந்ததால் நேற்று ஆளுநர் - பழனிசாமி சந்திப்பு நடக்கவில்லை. புதுச்சேரி சென்ற பழனிசாமி அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தினார். திமுக ஆதரவு குறித்து அப்போது பேசப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, இன்று திமுக ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை பழனிசாமி சந்திக்கக் கூடும் என தெரிகிறது.
விஜய்க்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அமையாத காரணத்தால் நாங்கள் பழனிசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்பில் விளக்கம் கொடுக்கப்படலாம். தங்களின் இந்த முடிவால் விஜய்யை ஆட்சியமைக்க முடியாமல் தடுத்துவிட முடியும் என நம்புகிறார் உதயநிதி. அதேபோல், பழனிசாமியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதால் அதிமுக-வை பிளவில் இருந்து காப்பாற்ற முடியும் என நினைக்கிறார்” என்கிறார்கள்.
யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிமுக ஆட்சி திமுக ஆதரவில் அமையுமா... திமுக எதிர்ப்பிலேயே வளர்ந்த அதிமுக-வின் எம்எல்ஏ-க்கள் அத்தனை பேரும் ஒரேமுகமாய் இதை ஏற்பார்களா... அல்லது திமுக உறவை காரணம் காட்டி அதிமுக-வில் பிளவு ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.