

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “நேரலை என்பது வெறும் உருட்டா?. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அதிமுக விமர்சித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நன்றாக இருக்கிறது சார் உங்கள் மாற்றம். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவது போன்ற ஐடியா இல்லை போல, அப்படித்தானே சார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும்” என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.