

சென்னை: இளைஞர்களை சமூக ஊடகங்கள் தவறாக வழி நடத்துவதாக, பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீப காலமாக நாட்டில் நடைபெற்று வரும் சில நிகழ்வுகள், நமது பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தையே பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
டெல்லியில் நடைபெற்றுள்ள முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்துகின்றன. உலக அரங்கில் பொருளாதார வலிமையுடன் முன்னேறி, நமது நாடு பயணித்து வருகிறது.
இந்த வளர்ச்சி உலக நாடுகளின்கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தகைய சூழலில், நமது பொருளாதார முன்னேற்றம் எந்த வகையிலும் சீர்குலைக் கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வடிவங்களில் வரக்கூடிய அச்சுறுத்தல்களை உணர்ந்து, அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றாக நான் கருதுவது சமூக ஊடகங்களின் தாக்கமாகும்.
அரசு துறை ஒரு திட்டத்தை அறிவிக்கும் போது, அது மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக நீதிமன்
றத்தை அணுகி நீதியை பெற வேண்டும்.
அதைத் தவிர்த்து, சமூக வலைதளம் வாயிலாக பலரையும் தூண்டும் விதமாக ஒரு கருத்தை சமூகத்தில் பதிவு செய்து, பலருக்கும் சட்டம், நீதி இருப்பதை மறக்கச் செய்தது மட்டுமின்றி, இந்தக் கருத்து அவர்களையும் தூண்டி, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய சக்தியை வீணடிக்க செய்வது தனி மனிதன் வளர்ச்சியையும் பாதிக்கும்.
எனவே, மத்திய அரசும், பிரதமரும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு சக்திகள் எதுவும் நமது அப்பாவி இளைஞர்களின் மனங்களில் தவறான, தீய மற்றும் அடிமைத்தனமான எண்ணங்களை விதைத்து, நாட்டின் வளர்ச்சிப் பாதையை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.