

சென்னை: கடந்த ஆட்சியில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் அனைத்து மாவட்ட மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளார்களிடம் அமைச்சர் கூறியதாவது: பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை இடமாற்றம் செய்ய கூறியுள்ளோம். இடமாற்றம் செய்யப்படும் கடைகள் 500 சதுர அடிக்கு மேல் இருக்கும் வகையிலும், ஒருபுறம் பில்லிங், ஒரு புறம் மது வாங்கி செல்லும் விதமாக திட்டமிட்டுள்ளோம். பார்கள் சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் டாஸ்மாக் கடைகளை கட்டுப்படுத்துகின்றனர்.
இதன்காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கும் பார்களுக்கும் 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பதை கொண்டு வந்தோம். கடந்த ஆட்சியாளர்கள் சொல்லித் தான் கடை பணியாளர்கள் விதிமீறலில் ஈடுப்பட்டனர்.
அதனால் கடந்த காலங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது செப்.1-ம் தேதியில் இருந்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதற்கு கடை பணியாளர்கள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. அந்த மாவட்ட மேலாளரும் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். தவறு செய்தவர்கள் யாரையும் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை.
என்னுடைய பெயரை பயன்படுத்தியும் சில இடங்களில் வசூல் செய்ததாக அறிந்தேன். 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி பாகுபாடின்றி யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழியர்கள் மேல் மட்டும் அல்ல, செப்.1-ம் தேதிக்கு பின் எந்த அதிகாரிகள் மீது புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தவெக அரசு பொறுப்பேற்றது முதல் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.
அனைத்து மதுபான உற்பத்தியாளர்களை நாங்கள் சமமாக பார்க்கிறோம். கடந்த ஆட்சியாளர்கள் போல் ஒரு சிலரிடம் வாங்கலாம். மற்றவர்களிடம் வாங்கக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மது கொள்முதல் கொள்கைகளை மாற்றியமைப்பது குறித்து இனி வரும் காலங்களில் முடிவெடுக்கப்படும்.
கரூர் கேங் யார் என்று முதல்வரே சொல்லி இருக்கிறார். அமலாக்கத்துறை கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முதல்வர் படித்து இருக்கிறார். இதெல்லாம் சொல்வது எதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கான சாட்சிகளை திரட்டி வருகிறோம். நிச்சயம் அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.