“ஊழலின் ஊற்றுக்கண்ணாக டாஸ்மாக்...” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

“ஊழலின் ஊற்றுக்கண்ணாக டாஸ்மாக்...” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: ‘டாஸ்மாக் உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகிறது. டாஸ்மாக்கை முற்றாக விட்டொழிப்பதே சரியான தீர்வாகும்’ என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்தவுடன் விஜய் அண்ணா எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடிவிடுவார் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அதற்கு நேர்மாறாக மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றால் சிலவற்றை இழந்தாகத்தான் வேண்டும். அரசுக்கு வரும் ரூபாய் 55,000 கோடி வருமானத்தை இழக்க மனமும் இல்லாமல், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடத் துணிவும் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

டாஸ்மாக் உற்பத்தி முதல் காலி பாட்டில் விற்பனை வரை எங்கும் ஊழல், எதிலும் ஊழல். ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினாலும் கடை வாடகை, மின் கட்டணம், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் சில்லறை பிரச்சினைகளுக்காக ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வது தீர்வாகாது.

டாஸ்மாக் உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகிறது. முதல்வர் விஜய் அரசே, டாஸ்மாக்கை முற்றாக விட்டொழிப்பதே சரியான தீர்வாகும். கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசை கொள்ளாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

“ஊழலின் ஊற்றுக்கண்ணாக டாஸ்மாக்...” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
“இந்தியர்களின் தற்சார்பு உணர்வுக்கு புத்தெழுச்சி ஏற்படுத்தியவர் வ.உ.சி” - முதல்வர் விஜய் புகழ் வணக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in