சென்னை: மியூசிக் அகாடமியின் 99-வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசைத் திருவிழா டிச.15-ம் தேதி தொடங்குகிறது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மியூசிக் அகாடமியின் 99-வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசைத் திருவிழா டிச. 15-ம் தேதி தொடங்கி, 2026-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி வரை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெறுகிறது.
இதில் தினமும் பல்வேறு கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இசைவிழாவை டிச.15-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைக்கிறார்.
2025-ம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமி விருதுகள் பெறும் கலைஞர்களை அகாடமியின் நிர்வாக குழு கூடி, ஒருமனதாக முடிவு செய்தது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு, பிரபல கர்னாடக வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே.ராம்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
‘சங்கீத கலாநிதி’ விருதாளர் என்ற வகையில், டிச. 15-ம் தேதி தொடங்கி, ஜன.1-ம் தேதி வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 99-வது இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளுக்கு அவர் தலைமை வகிப்பார்.
நிறைவு நாளான ஜன. 1-ம் தேதி மியூசிக் அகாடமியில் சதஸ் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின்
முன்னாள் இசை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் என்.ராஜம் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத ஆச்சார்யா’, ‘டிடிகே இசை அறிஞர்’ விருதுகளை வழங்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.