Published : 27 May 2023 10:53 PM
Last Updated : 27 May 2023 10:53 PM

தஞ்சாவூர் | இறந்தவரின் உடலை எடுத்து செல்ல அனுமதி மறுப்பால் கலவரமாக மாறிய கிராமம் - போலீஸ் வாகனம் உடைப்பு

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை, கீழக்கோயில்பத்து கிராமத்தில், இறந்தவரின் உடலை ஒரு தரப்பினரின் தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கல்வீச்சு, சாலை மறியல், போலீஸ் வாகனம் உடைத்து இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கீழகோவில்பத்து கிராமத்தில், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (53). இவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது உடலை வடபாதி கிராமம், ஆதிதிராவிடர் தெரு வழியாக இன்று மாலை எடுத்து சென்றுள்ளனர்.

அதற்கு, வடபாதி ஆதிதிராவிடர் தெருவினர், திருமண வரவேற்பு விழா நடப்பதால், வேறு வழியாக செல்ல கூறியுள்ளனர். ஆனால், சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் என கூறி, சீனிவாசன் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடலை கொண்டு போக கூடாது என கூறி, ஒரு தரப்பினர் டாடா ஏசி வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி மறித்தனர். இதனால், ஆத்திரமடைந்த சீனிவாசன் உறவினர்களுக்கும், கீழகோவில்பத்து ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இரு தரப்பினரும் கற்களையும், கட்டையையும் வீசி ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையில் சீனிவாசன் உடலை சாலையின் மையத்தில் வைத்து, நாகப்பட்டிணம்–திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த அந்த இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சீனிவாசன் உடலை வடபகுதி ஆதிதிராவிடர் தெரு வழியாக தான் இடுகாட்டிற்கு கொண்டு செல்வோம் என கூறி தகராறில் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் ஏற்பட்ட கல்வீச்சில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கரிகாலசோழனின் ஜீப்பின் பின்புறம் கண்ணாடி நொருக்கப்பட்டது. மேலும், தனியார் பஸ் ஒன்றையும் கண்ணாடியை உடைத்ததால், அப்பகுதியில் காவல் அதிவிரைப்படையினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாபாநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, டிஎஸ்பிக்கள் பூர்ணிமா, மகேஷ்குமார், பாலாஜி மற்றும் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வடபாதி ஆதிதிராவிடர் தெருவழியாக சீனிவாசன் உடலை பலத்த போலீஸார் பாதுகாப்புடன் அவரது உறவினர்கள் எடுத்து சென்று தகனம் செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x