Published : 26 May 2023 05:09 PM
Last Updated : 26 May 2023 05:09 PM

அரியலூர் - ஆண்டிமடம் காவல் நிலைய ஆயுதக் கொள்ளை வழக்கில் தண்டனைக் குறைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கொள்ளை அடித்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விடுதலை படை எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. அந்த அமைப்பினர், கடந்த 1997-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளை அடித்துச் சென்றனர். அப்போது தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வீசி சென்றனர்.

இந்த வழக்கில் க்யூ பிரிவு போலீஸார் 14 பேரை கைது செய்திருந்த நிலையில், விசாரணையின் போது 3 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 பேர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழர் படையைச் சேர்ந்தவர்களுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டார்.

காவல் துறையினரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்தை தாக்கவில்லை என்றாலும் கூட, துப்பாக்கி உள்ளிட்ட அரசு சொத்துகளை கொள்ளையடித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x