Published : 26 May 2023 03:05 PM
Last Updated : 26 May 2023 03:05 PM

மெரினா கடற்கரைக்கு இரவில் வரும் மக்களை போலீஸ் துன்புறுத்துகின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம்? - ஐகோர்ட் கேள்வி

கோப்புப்படம்

சென்னை: ‘கோடை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க மெரினா கடற்கரைக்கு இரவில் வரும் மக்களை நேர கட்டுப்பாட்டை காரணம் காட்டி காவல் துறையினர் துன்புறுத்துகிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கோடை வெயில் 40 டிகிரி செல்சியசைத் தாண்டி உக்கிரமாக அடிக்கிறது. இதனால், மக்களுக்கு கடவுள் கொடுத்த கொடையாக உள்ள மெரினா கடற்கரையில் வெப்பத்தைத் தணிக்க மக்கள் கூடுகின்றனர். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் கடற்கரையில் இருந்து மக்களை அப்புறப்படுத்துகின்றனர்.

கான்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில், உயர்ந்த கட்டிடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. நகருக்குள் காற்று வீச முடியாத நிலையே இருந்து வருகிறது. கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

எனவே, கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்க வேண்டும். மக்களை துன்புறுத்தக்கூடாது என காவல் துறையினருக்கு அறிவுறுத்த கோரி நான் அளித்துள்ள விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிரருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களை காவல் துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர், அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x