Published : 26 May 2023 06:12 AM
Last Updated : 26 May 2023 06:12 AM

முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் இல்லை - கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: அதிமுக ஆட்சியில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: உலக முதலீட்டாளர் மாநாட்டில் பிற நாட்டின் தொழிலதிபர்களை பங்கேற்கச் செய்யவும், புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அரசு முறை பயணம் மேற்கொண்டதை கொச்சைப்படுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சனம் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அகில இந்திய அளவில் நாட்டுக்கு வந்த மொத்த மூதலீடுகளில் தமிழகத்துக்கு வந்தது வெறும் 0.79 சத வீதம் தான். அதிமுக ஆட்சியில் முதலீட்டுக்கு உகந்த மாநிலம் தமிழகம் இல்லை என்ற நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட பல நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் நிலவிய ஊழலும், நிர்வாக சீர்கேடும் தான்.

ஆனால் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில், 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, ரூ.2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம் தமிழகத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலை மிக மிக பிரகா சமாக இருப்பது தான். மேலும், 2022-23 நிதியாண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்நிய முதலீடு 16.3 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

இது ஒருபுறமிருக்க, புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் உயர்ந்த பதவிகளுக்கு தலித், பழங்குடியினரை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பிரதமர், அவர்களை அழைக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார்.

குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு, பிரதமரே நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது என்பது அரசமைப்புச் சட்டத்தையும், குடியரசு தலைவரையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, தான் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித் திருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x