Published : 21 May 2023 05:57 AM
Last Updated : 21 May 2023 05:57 AM

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழகத்தில் 12 நகரங்களில் வெயில் சதம்

கோவை ஆத்துப்பாலம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் வாகனத்தில் குடை பிடித்தபடி செல்லும் மக்கள் .படம் .ஜெ மனோகரன்

சென்னை: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று (மே 21) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலை யோரப் பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 22, 23, 24-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று 104 டிகிரி வெப்பம்: இதேபோல, தமிழகத்தில் சில இடங்களில் இன்று (மே 21) அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.

மே 20-ம் தேதி (இன்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 6 செ.மீ., நாலுமூக்கில் 5 செ.மீ., மதுரை மாவட்டம் ஏழுமலை, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, நீலகிரி மாவட்டம் குன்னூர், குந்தா பாலம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மே 23, 24-ம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் பரமத்தியில் 106 டிகிரி: நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி, வேலூரில் 105 டிகிரி, திருத்தணியில் 104 டிகிரி, ஈரோடு, திருச்சி,சேலம், மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூரில் 102 டிகிரி, திருப்பத்தூரில் 101, காரைக்கால், நாகப்பட்டினத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x