Last Updated : 19 May, 2023 07:00 AM

 

Published : 19 May 2023 07:00 AM
Last Updated : 19 May 2023 07:00 AM

விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம் சென்னையில் அறிமுகம்: ‘நவீன கேமரா’ பொருத்தப்பட்டு இரவிலும் படம்பிடித்து அபராதம் விதிக்கும்

விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் ‘நவீன கேமரா’ பொருத்தப்பட்ட நடமாடும் வாகனம்

சென்னை: விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட நடமாடும் போக்குவரத்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசலை முற்றிலும் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் கையடக்க கருவி மூலம்நேரடியாக அபராதம் விதிக்கின்றனர்.

மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் களப்பணியில் உள்ள போக்குவரத்து போலீஸார் விதி மீறல் வாகனஓட்டிகளை தங்களது செல்போனில்படம் பிடித்து, அதன் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து சுமார் ரூ.12 கோடிவசூலிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை மீறும் வாகனங்களுக்கு கண்டிப்புடன் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன்மூலம் 2021-ஐ ஒப்பிடுகையில் 2022-ல்விபத்துகள் 11.84 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் விபத்து உயிரிழப்புகளும் 11.52 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கையே காரணம் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு எதிரான நடவடிக்கையை போக்குவரத்து போலீஸார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, தற்போது சென்னை போக்குவரத்து காவல் துறையில், ‘இடைமறிப்பான் (Interceptor)’ என்ற நவீன கேமராபொருத்தப்பட்ட வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே உள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சென்னையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சோதனை ஓட்டமாக இரண்டு வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை பொறுத்து ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும் ஒவ்வொரு வாகனம் வாங்கப்பட உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெளிநாட்டு பாணியில் டிராஸ் (TROZ) என்ற கேமரா சென்னை அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் வைக்கப்பட்டு அது எடுத்து அனுப்பும் புகைப்படம் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் இந்தவகை கேமரா பொருத்த ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் கண்காணிப்பு கேமரா மூலம் படம் பிடித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கும் நவீன கேமராக்கள் யானைகவுனி, வேப்பேரி, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, கோயம்பேடு, கிண்டி உள்பட 11 இடங்களில் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition) என்றழைக்கப்படும் அதிநவீன தானியங்கி கேமராக்களும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் 'இன்டெர்செப்டர்’ என அழைக்கப்படும் ‘இடை மறிப்பான்’ ரோந்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 360 டிகிரியில் சுழன்று படம் பிடிக்கும்அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் சுமார் 200 மீட்டர் தொலைவில் வரும் விதி மீறல்வாகனங்களை கூட துல்லியமாக படம்பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதன் அடிப்டையில் கட்டுப்பாட்டறையில் இருந்தவாறே போலீஸார் அபராதம் விதிப்பார்கள்.

தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் இந்த வாகனங்களை கொண்டு சென்று நிறுத்தமுடியும். கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளை தெரிந்து கொண்டு சில வாகனஓட்டிகள் சாலை விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுப்பதோடு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களில் இந்த வாகனங்களை நிறுத்த முடியும். இதன் மூலம் சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீதான பிடி மேலும் இறுகுகிறது’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x