Published : 18 May 2023 02:59 PM
Last Updated : 18 May 2023 02:59 PM

ஆசிரியர்களுக்கு வாடகையில்லா வீடுகள் கோரும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தனியார் பள்ளி மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள், அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக அந்த தொகையை பயன்படுத்துவது இல்லை. தனியார் பள்ளிகளில் பணிசெய்யும் ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியமே கொடுக்கப்படுகிறது. மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களை பிற தேவைகளுக்கு பயன்படுத்துகிறது.

எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புக்களை கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஆசிரியர்கள் குடியிருப்புகள் கட்டத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்யவும், வீடு வாங்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மானியம் வழங்கவும், வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால், அது தவறான சிக்னலை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x