Published : 18 May 2023 02:55 PM
Last Updated : 18 May 2023 02:55 PM

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே ஊராம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி அருகே பள்ளப்பட்டி சேர்ந்தவர் கடற்கரை. இவர் உரிய உரிமம் பெற்று ஊராம்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிற்பகல் 12 மணி அளவில் மருந்து கலவை செய்யும் அறையில் பட்டாசு மூலப் பொருட்களை கலவை செய்யும்போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

அருகில் இருந்த அறை சேதமடைந்தது. இதில் அந்த அறையில் பணிபுரிந்த மம்சாபுரத்தை சேர்ந்த குமரேசன் (33), பள்ளபட்டியை சேர்ந்த சுந்தர் ராஜ் (27), ரிசர்வ் லைன் சிவன் காலணியை சேர்ந்த அய்யம்மாள் (70), இருளாயி(45) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்களை பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரேசன், சுந்தர்ராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து அய்யம்மாள், காலில் காயமடைந்த இருளாயி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து பட்டாசு தனி வட்டாட்சியர் ஶ்ரீதர், வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அமைத்தனர். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x