Last Updated : 17 May, 2023 02:35 PM

1  

Published : 17 May 2023 02:35 PM
Last Updated : 17 May 2023 02:35 PM

தமிழகத்தில் ஏற்பட்ட கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு புதுச்சேரி அரசுதான் பொறுப்பு: நாராயணசாமி காட்டம்

மரக்காணத்தில் போலீஸார் | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட கள்ளச் சாராயத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மரணங்களுக்குப் பொறுப்பேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். சில அரசியல் தலைவர்களும் இதன் பின்னணியில் இருப்பதால் வாயைத் திறக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளிடம் பேசிய அவர் கூறியது: "புதுச்சேரியில் கள்ளச் சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச் சாராய சில்லறை விற்பனை செய்தோர் புதுச்சேரியைச் சேர்ந்த இருவரிடம் இருந்து வாங்கியதாக வாக்குமூலம் தரப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடத்திச் சென்று தமிழகத்தில் விநியோகித்து பலியான உயிர்களுக்கு முழு பொறுப்பை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும். கலால் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் காவல் துறை, கலால் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச் சாராய பேர்வழிகளுக்கு புதுச்சேரி அரசு உடந்தையாக உள்ளது. காவல் துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச் சாராய விற்பனை அனுமதியை அரசு வேடிக்கை பார்க்கிறது.

கலால் துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து முதல்வர் ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதை பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு புதுச்சேரி அரசுதான் பொறுப்பு.

கள்ளச் சாராய உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தமிழகத்தில் ராஜினாமா செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. அதே கோரிக்கையை புதுச்சேரியிலும் முன்வைத்து முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வலியுறுத்துவாரா? இதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்.

ரங்கசாமி ஆணவம்தான் தமிழக உயிர் பலிக்கு முக்கியக் காரணம். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழகத்துக்கு அனுப்பி உயிர் பலி ஏற்பட்டுள்ளது ஆட்சியாளர்களால் புதுச்சேரிக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி எந்தக் கடவுளை வேண்டினாலும் பாவ மன்னிப்பு கிடைக்காது. கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முடியாதற்கு முக்கியக் காரணம் ஊழல்தான். இதற்கு சிபிஐ விசாரணை வைக்க தயாரா?

மக்கள் கொதித்து போயுள்ளனர். கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட வேண்டிய நிலை ஏற்படும். சில அரசியல் தலைவர்களும் இதில் பின்னணியில் உள்ளதால் வாயை திறக்க மாட்டார்கள். தமிழகத்துக்கு விற்ற புதுச்சேரி கள்ளச் சாராய வியாபாரிகள் பரக்கத்துல்லா என்ற ராஜா, ஏழுமலை ஆகியோரை கைது செய்துள்ளனர். இதில் சாராயம் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு சென்றது உறுதியாகியுள்ளது.

இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். என்ன செய்ய போகிறார்கள்? கலால் துறையினர் லஞ்சம் வாங்கி தந்ததால் கண்டுகொள்வதில்லை. கள்ளச் சாராயத்தால் தமிழக உயிரிழப்புக்கு புதுச்சேரி முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x