Published : 17 Oct 2017 09:00 AM
Last Updated : 17 Oct 2017 09:00 AM

இனிப்புகளின் தரம் குறைவாக இருந்தால் வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர், இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அதிகப்படியான செயற்கை வண்ணங்களைக் கொண்டு இனிப்பு கள் தயார் செய்யப்பட்டிருந்தால் அவற்றை வாங்குவதை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். இனிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய், நெய் விவரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனைக் கூடத்தில் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகளில் தயாரிப்பாளரின் முழு முகவரி அச்சிட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காலாவதியாகும் நாள், வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். தாங்கள் வாங்கும் இனிப்பு, கார வகைகளுக்கு முறையான ரசீதை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இனிப்பு, கார வகைகளின் தரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உணவு பாதுகாப்புத் துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x