Last Updated : 15 May, 2023 07:00 AM

 

Published : 15 May 2023 07:00 AM
Last Updated : 15 May 2023 07:00 AM

பதிவெண் பலகையில் ‘அ’, ஜி’ என எழுதி விதிமீறல்: அரசு வாகனங்களுக்கும் போலீஸார் அபராதம்

சென்னை: விதிகளை மீறி, நம்பர் பிளேட்டில் சிவப்பு நிறத்தில் ‘அ’, ‘ஜி’ என்று எழுதியுள்ள அரசு வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். இதுபோன்ற விதிமீறல் நடப்பது தெரியவந்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்னர்.

போக்குவரத்து விதிமீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகன பந்தயத்தில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும் விதிமீறலுக்கு ஏற்ப, அபராதம் விதிக்கப்படுகிறது.

நேரடியாக களத்தில் நின்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையிலும், ஏஎன்பிஆர் வகை கேமராக்கள் மூலமாகவும் விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இதுதவிர, நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து சுமார் ரூ.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளுக்கும் அபராதம்: இதற்கிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்றகுற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விதிமீறும் அரசுப் பேருந்துஉள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். ஐபிஎஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

ரூ.500 முதல் அபராதம்: அரசு வாகன பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட்) அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் ‘அ’ என தமிழிலும், ‘ஜி’ என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். இது விதிமீறல் என சுட்டிக்காட்டி பொது மக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு ட்விட்டர், முகநூல், வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் புகார் தெரிவித்தனர்.

இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதை ஆதாரமாக வைத்து, சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசுஅதிகாரிகளுக்கு தற்போது ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள், அரசு பணியாளர்கள், அதிகாரிகள், தனியார் வாகனம், அரசு வாகனம் என்ற பாகுபாடின்றி, விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

‘அ’, ‘ஜி’ பயன்படுத்த கூடாது: அரசு வாகனங்களில் ‘அ’, ‘ஜி’ என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு துறையினருக்கும் அறிவுறுத்தி வருகிறோம். சில அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனத்திலும் இதுபோல எழுதியுள்ளனர். அதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளோம். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது உறுதி.

எந்த வகையான வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டாலும், அதுதொடர்பாக போக்குவரத்து போலீஸாரின் சமூக வலைதள பக்கத்தில் பொது மக்கள் புகார்கொடுக்கலாம். அதன் அடிப்படையில், உரிய மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x