Published : 12 May 2023 05:11 AM
Last Updated : 12 May 2023 05:11 AM

தமிழகத்தை ஐடி துறையில் முன்னணி மாநிலமாக்குவேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் முன்னணி மாநிலமாக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வேன் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதிபட தெரிவித்தார்.

தமிழக நிதியமைச்சராக இருந்து தற்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகியுள்ள பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது புதிய பொறுப்பு குறித்துவெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

மன நிறைவான பணி: கடந்த 2 ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் திருத்தப்பட்ட பட்ஜெட்டையும், அதன்பின் இரண்டாண்டு பட்ஜெட்களையும் சமர்ப்பித்துள்ளேன்.

முந்தைய ஆட்சியின் விளைவாக உச்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூகநலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச்சிறப்பான பகுதியாகக் கருது கிறேன்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் துறை: நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூகநல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்துக்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவையாகும்.

உலக அளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான முன்னணி துறையாகவிளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாகாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு தற்போது வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், தமிழகம் இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம்.

எனவே, எனக்கு முன்னால் இத்துறையை நிர்வகித்த மனோ தங்கராஜின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுபடுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒருமுன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிர்வகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவம், எனது தொழில் வாழ்வில் பெற்ற ஐடி மற்றும் ஐடி சார்ந்த தொழில்துறையுடனான தொடர்புகளும், இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.

தங்கம் தென்னரசுக்கு வாழ்த்து: நிதியமைச்சராகப் பொறுப்பேற்கும் தங்கம் தென்னரசு, வெற்றிகரமாக செயல்பட்டு மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கெனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என நம்புகிறேன்.

கடந்த 2 ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்போது எழுச்சிமிக்க புதியபொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ளதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x