Last Updated : 11 May, 2023 01:31 PM

 

Published : 11 May 2023 01:31 PM
Last Updated : 11 May 2023 01:31 PM

புதுவை அரசியல் | முதல்வரின் அதிகாரத்தை ஆளுநர் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார்: நாராயணசாமி

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஏமாளி என்பதால் அவரது அதிகாரத்தை ஆளுநர் தமிழிசை கையில் எடுத்துக்கொண்டுவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அரசையும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "முதல்வர் ரங்கசாமி நேரடியாக என்னை விமர்சனம் செய்துள்ளார். அவர் முதல்வராக, எதிர்க்கட்சித்தலைவராக இருந்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்கள் விரைவாக நடந்தன. ஆளுநர்கள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர். மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரி வழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது. கடந்த 2016-ல் காங்கிரஸ் அரசு பதவியேற்கும் முன்பு துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று விதிமுறைகளை மீறி செயல்பட ஆரம்பித்தார். அதனால் நீதிமன்றத்தை நாடினோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதைய அமைச்சர் லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வழக்கறிஞரான முதல்வர் ரங்கசாமி படித்துப் பார்க்க வேண்டும். துணை நிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்பது புரியும்.

நிர்வாக சீர்கேடு பற்றி முதல்வர் ரங்கசாமி எங்களை குற்றம்சாட்டுகிறார். விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. தற்போது நிர்வாக முறைகேடுகள் நடக்கின்றன. ரங்கசாமி நிர்வாகத்தில் புலி அல்ல. அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளுக்கு கையெழுத்து போடுபவர்தான் அவர். அது எனக்குத் தெரியும். தனக்கு இருக்கும் அதிகாரத்தைச் செலுத்தாமல் என்னை குறை கூறுவதை ரங்கசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கிரண்பேடி தொல்லையையும் மீறி நாங்கள் திட்டங்களை நிறைவேற்றினோம். தற்போது முதல்வரும் ஆளுநரும் அண்ணன்- தங்கை என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனாலும், திட்டங்கள் தடைப்படுவது ஏன்? மாநில அந்தஸ்து, மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்ப்பது உள்ளிட்ட ரங்கசாமியின் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை. ஒன்றுகூட நடக்காததை சுட்டிக்காட்டி கேட்கிறோம். ரங்கசாமி கோபப்படுவதில் அர்த்தம் இல்லை. நிதி அதிகாரம் இல்லாவிட்டால் நிதித்துறை, தலைமைச் செயலர் ஆகியோர் கையெழுத்திட மாட்டார்கள்.

ஏற்கெனவே தலைமைச் செயலர் அஸ்வினி குமாரை மாற்றினார்கள். தற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ் வர்மாவை மாற்ற கோரிக்கை வைக்கிறார். மத்திய உள்துறையில் பேசி ஒரு மணிநேரத்தில் தலைமைச்செயலரை மாற்றுவதை விட்டு அதிகாரிகள் திட்டங்களை முடக்குவதாக ரங்கசாமி புலம்புகிறார். கையாளாகாத ஆட்சி நடத்திவிட்டு எங்களை ரங்கசாமி குறை கூறுகிறார். பாஜகவுக்கும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் சுமூக உறவு உள்ளதா- மத்திய அரசு ஒத்துழைப்பு தருகிறதா என்பதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்.

யாருக்கு நிர்வாகம் தெரியாது என்பது புதுச்சேரி மக்களுக்கு தெரியும். நிர்வாகத்தில் விதிமுறைப்படி செயல்படவேண்டும். ரங்கசாமி எங்களை குறைகூறுவதை விட்டு நிர்வாகத்தை சரியாக நடத்தி, பிரதமரை அணுகி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதற்கான திட்டம், இலவச பேருந்து பயணத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தாமல் ரங்கசாமி எதிர்க்கட்சியினரை குறை கூறுகிறார். எதிர்க்கட்சியினரை சாடுவது முதல்வருக்கு அழகல்ல.

தற்போது தமிழக எம்பிக்கள் தொடர்பான பேட்டி விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை அந்தர் பல்டி அடித்துள்ளார். எம்பியை வரக்கூடாது என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பாக பேசுகிறார். தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசியலில் ஏன் மூக்கை நுழைக்கிறார்? வேண்டுமானால் பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசட்டும். தமிழக அரசை விமர்சனம் செய்வதுதான் தமிழிசையின் வேலையா?. புதுச்சேரியில் முதல்வருக்கு பதிலாக ஆளுநர் தமிழிசைதான் சூப்பர் முதல்வராக உள்ளார். அரசு திட்டத்தை முதல்வர்தான் அறிவிக்கவேண்டும். முதல்வர் ரங்கசாமி ஏமாளி. முதல்வரின் அதிகாரத்தை கையில் எடுத்து அவரை செயல்படவிடாமல் இருக்கிறார். முதல்வர் தரும் கோப்புகளுக்கு கையெழுத்து இடுவதாகக் கூறிவிட்டு ஊதிய உயர்வு கோப்பு உட்பட பல கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் தமிழிசை செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது. புதுச்சேரி வளர்ச்சிக்கு ஏதுமில்லை." இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x